• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரன்

ரோசி கஜன்

Administrator
Staff member
செந்தூரன் - நிதனிபிரபு


செந்தூரன்


“கொஞ்சம் சிரிச்சமாதிரி நில்லுங்க.” போட்டோ ஸ்டூடியோக்காரன் சொல்லவும் படக்கென்று இதழ்களில் புன்னகையைப் பூசிக்கொண்டேன். மேலதிகமாகக் கண்களை மலர்த்தினேன். அன்றலர்ந்த மலர்போல் அழகாகச் சிரித்தேன். இதமான புன்னகை! இதயத்தை வருடும் புன்னகை! உள்ளம் கொள்ளை போகும் புன்னகை. இப்படிப் பல புன்னகையை நான் வழங்க ஸ்டூடியோ அண்ணா கிளிக் கிளிக் என்று, என் பாவங்கள் மாறிவிடுமுன் வெகு வேகமாக கிளிக்கிக் கொண்டார்.

“வடிவா இருக்கிறீங்கம்மா!” கமெராவில் எடுத்த ஃபோட்டோக்களை சரிபார்த்துக்கொண்டு அவர் சொன்னபோது சட்டென்று என் முகத்தில் அன்றலர்ந்த மலரின் புன்னகை. புதிதாக ஒரு நம்பிக்கை ஒளி.

‘போனமுறை எடுத்த அந்த ஸ்டூடியோக்கார அண்ணா இப்படிச் சொல்லவே இல்ல. இண்டைக்குச் சகுனம் நல்லாத்தான் இருக்கு! அப்ப எல்லாம் நல்லதா அமையும்.’ இதுவரை நான் பிரசவிக்காமல் வைத்திருந்த கனவுகளும் கற்பனைகளும் தம் கூட்டை மெல்ல உடைக்கத் துவங்கியிருந்தன.

“கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..” என்னை நானே கேலி செய்துகொண்டேன். சட்டென்று என் இதழ்களில் வெட்கப்புன்னகை!

‘கடவுளே.. யாரும் பாத்தாலும்!’ சிரிப்பில் மலர்ந்திருந்த இதழ்களை அடக்க முயன்றவாறே விழிகளைச் சுழற்றினேன். யாரோ ஒருவன் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டு கடந்தது போலிருந்தது. அதற்கும் சிரிப்பு வந்தது.

அந்த அண்ணா, நான் சிந்திய அத்தனை வகைப்புன்னகையிலும் ஒவ்வொரு வகை ஃபோட்டோக்களைத் தந்தார். எனக்கே நான் மிகவும் அழகாய்த் தெரிந்தேன். திரும்பத் திரும்ப என்னையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தாலும், அவர் என்ன நினைப்பார் என்கிற வெட்கத்தில் அடக்கிக்கொண்டேன். உள்ளமெங்கும் சந்தோசம் பரவ, “தேங்க்ஸ் அண்ணா!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

போகும் என்னையே கனிவோடு அவர் பார்ப்பது தெரிந்தாலும் என்னைத் தாக்கவில்லை அது. கல்யாணச் சந்தையில் நீண்டநாட்களாக விற்கப்படாமல் எஞ்சிக்கிடக்கும் பண்டத்தில் நானுமொருத்தி. எனக்கென்றே ஒருவர் வராமலா இருக்கப் போகிறார்? எதிர்பார்ப்புடனேயே அம்மாவிடம் கொடுத்தபோது, “இந்தமுறை இன்னும் நல்லா வந்திருக்குப் பிள்ளை!” என்று அவரும் என் சந்தோசத்தைக் கூட்டினார்.

“அம்மா, இண்டைக்கு வேண்டாம் நாளைக்குக் குடுங்கோ.” சின்னத் தயக்கத்தோடு சொன்னேன்.

“ஏனம்மா?”

“அது.. நாளைக்கு நாள் நல்ல நாளாம். கலண்டர்ல பாத்தனான்.” சின்ன வெட்கத்தோடு முணுமுணுத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

சிரிப்பும் வந்தது. பின்னே, சகுனம், ராசி, நல்லநாள், கெட்டநாள் இதெல்லாம் நானும் பார்க்கத் துவங்கிவிட்டேனே.

“இந்தமுறை சரியா வரும் எண்டு தரகரும் நம்பிக்கையாய்ச் சொல்றார் பிள்ள!” ஃபோட்டோவைக் கொடுத்துவிட்டு வந்து அம்மா சொன்னபோது, என் நடையில் துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது.

முதன் முதலாக வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல என் கற்பனைகள் சின்னச்சின்ன தயக்கத்தோடு சிறகுவிரிக்கத் துவங்கின. என் இதழ்கள் ரகசியமாய்ப் பாடல்களை முணுமுணுக்கத் துவங்கின.

நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும்!
விரல்களைப் பிணைத்தவாறு பேச வேண்டும்!
காலை எழும்போது நீ வேண்டும்!
தூக்கம் வரும்போது தோள் வேண்டும்!
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்!
செந்தூரா ஆ..! ஆ..! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ..! ஆ..! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ..! ஆ..!



இனியும் மறுப்பார்களா என்கிற குட்டிக் கர்வம் வேறு என்னிடத்தில்! பின்னே, இத்தனை நாட்களாக மேக்கப்பே போடாதவள் போட்டுக்கொண்டபோது என்னாலேயே என்னை நம்ப முடியவில்லையே! நம்பிக்கையோடு நல்ல பதிலுக்காகக் காத்திருந்தேன். ‘என் செந்தூரன் யாரோ?’ எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் என் பெண்மனம் தேடத் துவங்கியிருந்தது.

‘எப்படி இருப்பார்?’

‘அவர் எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். என்னைப் பிடிச்சு எனக்காக வாறவரின்ர மனம் கோணாம நடப்பன். அவருக்கு முதலே எழும்பி, அவருக்குப் பிடிச்சதைச் சமைச்சு வச்சு, பின்னேரம் எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமக் கவனிச்சு.. அவரின்ர குடும்பத்தை என்ர குடும்பமா நினச்சு, அவர் கோபப்பட்டாலும் பொறுமையா இருந்து.. சந்தோசமா வாழவேணும். என்னைக் கட்டினதுக்கு என்றைக்கும் அவர் சந்தோசப்படவேணும்!’ ஓராயிரம் கற்பனைகள்.

‘என்னவரின் தோளில சாஞ்சுகொண்டு, அவர் என்னைப்பார்க்க, நான் அவரின்ர கண்களைப் பார்த்தபடி, கரங்களைக் கோர்த்தபடி, இப்படி அடுத்தமுறை சோடியாக நிறைய ஃபோட்டோ எடுக்கவேணும். அதுவும் இந்த அண்ணாவின் ஸ்டூடியோவுக்குப் போய்த்தான் எடுக்கவேணும். ராசியான அண்ணா.’

எண்ணங்கள் அத்தனையும் எனக்குள் பரவசமூட்டிக்கொண்டிருக்க, கண்களில் கனவுமின்ன மாய உலகமொன்றில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன்.

மனதின் ஓர் ஓரத்தில் மட்டும் ‘இன்னும் பதில் வரேல்லையே.’ என்று பரிதவித்துக்கொண்டிருந்தேன். இதற்குமுதல் கிட்டிய பல ஏமாற்றங்கள் பயத்தை வரவழைக்க, ‘பிள்ளையாரப்பா! இந்த வரன் சரியா வந்திடவேணும். யேசப்பா உமக்கு ஆளுயுரத்தில மெழுகுதிரி கொழுத்தவன்!’ என்று வேண்டிக்கொண்டேன்.

தரகர் சொன்ன இரண்டு நாட்களும் போனது. பதில் மட்டும் வரவேயில்லை. அம்மாவும் இயல்பாக இல்லாமல் பதிலை எதிர்பார்த்து வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடந்துகொண்டிருந்தார். அவரைப்போல என் தவிப்பை, எதிர்பார்ப்பை என்னால் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை.

அறைக்குள் அடைந்துகிடந்து உலகிலுள்ள அத்தனை தெய்வங்களிடமும் சரணடைந்திருந்தேன். ‘புத்த பெருமானே.. சரியா வந்திடவேணும். அல்லாஃ அக்பர்.. உங்களை எப்படிக் கும்புடவேணும் என்றுகூடத் தெரியாது. அதுக்காக ஏமாத்திப்போடாதீங்கோ. இந்தக் கல்யாணம் சரிவந்திடவேணும்!’

ஒருவர் கைவிட்டால் மற்றவராவது கைகொடுக்கட்டும் என்று எல்லோரையும் வேண்டிக்கொண்டேன். இப்படி எத்தனை தடவைகள் தான் நானும் ஃபோட்டோவைக் கொடுப்பதும், காத்திருப்பதும், எதிர்மறையாகப் பதில் வருவதும் கண்ணீரை அடக்கிக்கொண்டு ஒன்றுமேயில்லை என்பதுபோல் நடிப்பதும். இந்தமுறை ஏனோ ஆழமாய் நம்பினேன்!

“தரகரை ஒருக்காப் பாத்திட்டு வாறன் பிள்ளை!” இதற்குமேலும் காத்திருக்கப் பொறுமையில்லாது, விறுவிறு என்று சேலையைச் சுற்றிக்கொண்டு வீதியில் இறங்கினார் அம்மா.

வேகமாக வெளியே வந்து, வாசல் நிலையிலேயே காத்திருந்தேன். காயா பழமா? பதில் தெரிந்துவிடப்போகிற அந்த நிமிடங்களைக் கடக்கையில் நரகவேதனையை உணர்ந்தேன். இது புதிதல்ல எனக்கு. என் ஃபோட்டோ போகும் ஒவ்வொரு முறையும் அனுபவிப்பேன். ஆனாலும் பழகிப்போகாமல் ஒவ்வொருமுறையும் வலித்தது.

என் முகத்தைப் பார்த்துவிட்டு ஒருவன் மறுக்கிறான். யார் என்றே தெரியாதவனைக் கனவுகளில் சுமக்கிறேன் நான். சூடான கண்ணீர் துளிகள் என் கன்னத்தைச் சுட்டுக்கொண்டு ஓடின! எதற்கிந்த சாபம்? தெரியவில்லை!

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஊரார் கேட்கும், ‘இன்னும் கல்யாணம் சரிவரேல்லையா?’ என்கிற கேள்வியை எதிர்கொள்வேன் என்றே தெரியவில்லை.

இப்போதெல்லாம் தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர்த்துத் தேவையில்லாமல் வெளியே போவதேயில்லை. யாருடனும் கதைக்கவேண்டி வந்தாலே பயம் வந்து கவ்விக்கொள்ளும் என்னை. என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும், அந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களோ என்று உள்ளூரப் பயந்துகொண்டே கதைப்பதால், இப்போதெல்லாம் மற்றவர்களுடன் கதைப்பதை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டேன்.
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
படலையைத் திறந்துகொண்டு அம்மா வருவது தெரிந்தது. என் இதயத்துடிப்புப் பலமடங்காகியது. அம்மாவின் முகம் வாடி வதங்கிப்போயிருப்பதிலேயே காய்தான் என்று கண்டு துடித்துப்போனேன். அனுபவம் கைகொடுக்கக் கண்ணீரை அடக்கிக்கொண்டு சாதாரணமாக அம்மாவைப் பார்த்தேன்.

“என்னத்துக்கு என்னையே பாக்கிற? இடுப்புக்குக் கீழ முடியிருந்தா குடும்பத்துக்கு ஆகாதாம்! கண்டறியாதவங்கள்!” சொல்லிவிட்டு விறுவிறு என்று என்னைக்கடந்து வீட்டுக்குள் போய்விட்டார் அம்மா.

‘வெட்டினா போச்சே..’ வாய்வரை வந்த வார்த்தைகளை யாரிடம் சொல்வேன்?

“எங்க இருந்துதான் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாங்களோ தெரியாது! எளியவங்கள்!” புறுபுறுத்துக்கொண்டே சேலையைக் கழட்டி எறிந்துவிட்டு வீட்டுடைக்கு மாறிக்கொண்டிருந்தார் அம்மா.

“அப்பனில்லாத பிள்ளையைக் கூலி வேல செய்து எண்டாலும் நல்லபடியா வளத்திட்டன், ஒரு திருமணத்தைச் செய்து கண்ணாரப் பாப்பம் எண்டா எங்க? நான் கட்டைல போனாலும் நடக்காது போலக்கிடக்கு!!” தடாம் புடாம் என்கிற சத்தத்துடன் வேலைகள் நடந்தாலும் வார்த்தைகளைக் கொட்டித் தன் கோபத்தைத் தீர்க்க முயன்றுகொண்டிருந்தார் அவர்.

கண்ணீர் கண்களை நிறைக்க அறைக்குள் புகுந்துகொண்ட என் உள்ளம் புழுவாய்த் துடித்தது. ‘உனக்கும் என்ன பிடிக்கேல்லையா?’ கண்ணீர் மல்க கண்ணாடியில் யார் என்றே தெரியாத அவனிடம் கேட்டேன். இதற்குள் எத்தனை கற்பனைகள்? எத்தனை கனவுகள்? இப்படி எத்தனை தடவைகள்? நெஞ்சில் கூசியது!

இடுப்புக்குக் கீழே முடியிருந்தால் குடும்பத்துக்கு ஆகாதாம்!

கொஞ்சம் குண்டாக இருக்கிறேனாம்!

நிறம் குறைவாம்!

உயரம் கொஞ்சம் குறைவாம்!

இப்படி எத்தனையோ காரணங்கள். அவர்கள் சொன்னபிறகுதான் இவையெல்லாம் ஒரு பெண்ணுக்கான குறைகள் என்று எனக்கே தெரிந்தது. ஆனால், இயற்கையின் நியதிகளை எப்படி மாற்றியமைப்பது?

இதையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தவர்களுக்கு, என் கருணைகொண்ட உள்ளத்தை, பக்குவமாய்ப் பழகும்விதத்தை, பொறுமையாய் ஒவ்வொன்றையும் கையாளும் குணத்தை, மற்றவரை மதிக்கும் பண்பை எல்லாம் புகைப்படம் காட்டாது என்று தெரியாதா?!

அல்லது வெளித்தோற்றம் தான் கல்யாணச் சந்தையில் முக்கியமோ?

ஒரு டிவி வாங்குவது என்றால் கூட, அதன் தோற்றத்தைக் காட்டிலும் அதற்குள் என்னென்ன இருக்கிறது என்று ஆராயும் உலகம், மிகுதிக் காலமுழுமைக்கும் வரப்போகிறவளை மட்டும் ஏன் புறத்தோற்றத்தை வைத்தே கணக்கிடுகிறது?

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. நான் ஃபோட்டோ எடுத்துக்கொண்டே இருந்தேன். என் மீதான கவலையில் அம்மாவும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டே போனார்.

எப்போதுமே எங்கள் வீட்டிலிருந்துதான் ஃபோட்டோ போகும். அன்று மாறுதலாக அம்மா ஃபோட்டோ ஒன்றைக் கொண்டுவந்து நீட்டினார். “நல்ல குடும்பம். ஒரே பிள்ளை. அரசாங்க உத்தியோகமாம். என்ன ஒண்டு.. முதல் கல்யாணம் கட்டி ஒரு வருசத்திலேயே மனுசி செத்திட்டுதாம். ஒரு பிள்ளை இருக்காம்.” தொடர் குண்டுகளை வெகு சாதாரணமாக அம்மா போட்டுவிட்டுப் போகவும், நிலைகுலைந்து நின்றேன் நான்.

‘இரண்டாம் தாரம்!’ இடிவிழுந்தது என் தலையில்!

என் கற்பனைகள் கனவுகள் எல்லாமே என் கண்முன்னே இடிந்து நொருங்கிக்கொண்டிருந்தது. எதன் அடிப்படையில் முதல் தாரமாகத் தகுதி இல்லாமல் போனேன்?

“ரெண்டாம் தாரமா ஏனம்மா?” மெல்ல அம்மாவிடம் கேட்டுப்பார்த்தேன்.

“என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? பாக்கிறவன் எல்லாம் வேண்டாம் வேண்டாம் எண்டா நானும் என்னதான் செய்ய? உனக்கு வயசும் போகுது. இன்னும் கொஞ்சக் காலம் போனா ரெண்டாம் தாரமாவும் மாட்டன் எண்டுவாங்கள். ஒரு வருஷம் தானே.. அதப் பெருசா நினைக்காத!”

பெருசாக நினைக்காமலிருக்க நான் என்ன வாழ்ந்து முடித்தவளா? நான் ஒரு இளம் பெண். எல்லோரையும் போலவே கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தவள். ஏழ்மையும், என் குறைவான நிறமும், குறைவான உயரமும் ஆசைகளுக்கு அணைபோட்டுவிடுமா என்ன?

எனக்குத் திருமணமாகாத இளம் வாலிபன் ஒருவனைத்தான் மணக்கப் பிடித்திருக்கிறது என்று எப்படிச் சொல்வேன்? பெண்ணாகப் பிறந்துவிட்டேனே. கவிதைகளும் கட்டுரைகளும் மேடைப் பேச்சுக்களும் பெண்ணாகப் பிறப்பதை வரம் என்று பேசிக்கொண்டிருக்க, அது பெரும் சாபக்கேடு என்று என்னைப் போன்ற பெண்களுக்குத்தானே தெரியும்!

எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது இப்படித்தான் வேண்டும் என்று வாயைத் திறந்து சொல்லமுடியாத பிறப்பு எப்படி வரமாகும்?! என் பிறப்பை நானே சபித்தேன்.

“இங்கபார் பிள்ளை. முதல் எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருந்தது. கோபமும் வந்திட்டுது. ஆனா, தரகர் சொன்னமாதிரி பெடியனுக்கு வயசு குறைவுதான். ஆளும் பாக்க நல்லா தெரியிறார். ரெண்டுபேருக்கும் பொருத்தமும் அமோகமா அமைஞ்சிருக்கு. இப்படி ஒரு பொருத்தம் லேசுல அமையாதாம்.”

தரகர் கக்கியதை அம்மா துப்பிக்கொண்டிருந்தார். கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பொருத்தங்களைப் பார்த்த அம்மா ஏன் மனப்பொருத்தத்தைப் பார்க்கவில்லை?

“நான் போய்ச் சேருறதுக்குள்ள உன்ன ஒருத்தனிட்ட பிடிச்சுக் குடுத்திடவேணும். தயவுசெய்து வேண்டாம் அது இது எண்டு சொல்லி குறுக்கால நிண்டுடாத. எனக்கும் வயசு போயிட்டுது.”

அம்மாகூடத் தன் கடமையைத் திறம்பட முடித்துவிட்டு விடைபெற நினைக்கிறார். என் உள்ளத்தைப்பற்றிக் கவலையில்லை. எனக்குப் பிடித்திருக்கிறதா? விருப்பமா என்கிற கேள்வியே இல்லை. இரண்டாம் தரமாகக் கட்ட ஒருவன் சொன்ன சம்மதமே போதுமாகப் போயிற்று!

எல்லாமே வெறுத்துப் போயிற்று!

ஒருவன் என் புகைப்படத்தை வாங்கி எப்படியெல்லாம் பார்த்தானோ எங்கெல்லாம் பார்த்தானோ? பார்க்கும்வரை பார்த்துவிட்டு வேண்டாம் என்று அவன் ஒதுக்க, மீண்டும் இன்னொருவன்! இப்படி எத்தனைபேர் பார்த்திருப்பார்கள்? எண்ணிக்கை எனக்கே நினைவில்லை. எவன் வாழ்க்கையைப் பிச்சையாகப் போடுவான் எண்டு மடியேந்திக் காத்திருக்கும் நிலை எதற்கு? ஆவேசம் வந்தது எனக்கு. பிரயோசனமில்லாத ஆவேசம்! எதையும் மாற்றிப்போடும் வலுவில்லாத ஆத்திரம்!

‘நீங்க எல்லாம் என்ன மனுசர்கள்?’ ஊரை நோக்கி உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தாலும் அடக்கிக்கொண்டேன். பிறகு பைத்தியக்காரி என்கிற பட்டத்தையும் தந்து மூன்றாவது நான்காவது தாரத்துக்கு என்னைத் தள்ளிவிடக் கூடியவர்கள்.

என் கோபங்களை எல்லாம் கொட்டுவதற்கு தெய்வத்தைச் சரணடைந்தேன். கண்களில் கண்ணீர் பெருகிற்று! அந்தத் தெய்வத்தின் மீதுகூட நம்பிக்கை இல்லாமல் போயிற்று!

யாரோ பெற்ற பிள்ளைக்கு அம்மா நான்தான் என்று மனம் ஒப்பாமல் நானே என்னை ஏமாற்றிக்கொண்டு, என்னைத் தொடவரும்போதெல்லாம் இன்னொருத்தியோடு வாழ்ந்தவன் என்கிற நினைவை கசப்பு மாத்திரையைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டு, நான் வாழவேண்டும். நாளடைவில் எனக்கும் ஒரு குழந்தை பிறக்கும். நாலுபேரின் முன்னே நாங்கள் கணவன் மனைவி பிள்ளைகள் என்று வாழ்வோம். பார்ப்பவர்களும், ‘அவளுக்கென்ன சந்தோசமாத்தானே வாழ்கிறாள்’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்கள் சொல்லப்போகும் அந்த வார்த்தைக்காக நான் உடலாலும் மனதாலும் படப்போகிற வேதனை எத்தனை? ஒருமுறை மட்டுமே வாழப்போகும் வாழ்க்கையை இத்தனை நரகவேதனையோடுதான் வாழவேண்டுமா?

கோயிலில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்து வாழ்க்கையையே நொந்துகொண்டிருந்த என் அருகே யாரோ வந்து அமர்ந்த அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவன்.. கண்களில் சோகத்தோடு!

“தகுதி இல்லாத மனுசருக்காக உன்ர கண்ணீரை வீணாக்காத. உன்ர அருமை தெரியாத முட்டாள்கள். ஆனா நீயும்தானே உனக்காகவே வாழுற என்னைத் திரும்பியும் பாக்கேல்லை.” என்றான் அவன்.

திடுக்கிட்டுப்போனேன் நான். இவனை இன்றுதானே முதன்முதலாகப் பார்க்கிறேன்.

“என்னைத் தெரியவே தெரியாதா?” எனது நயனங்கள் பேசிய மொழி புரிந்துவிட வாடிப்போன முகத்துடன் கேட்டான் அவன். அவனது வாட்டம் மனதைத் தைத்தாலும் மறுத்து மெல்லத் தலையசைத்தேன்.

“உனக்குப் பின்னாலேயே திரியிறன். நீ திரும்பியும் பாக்கேல்லை. நீ பாக்கிற அளவுக்கு நானும் இல்லத்தானே.” விரக்தியோடு சொன்னான். அவன் வேதனை என் நெஞ்சைச் சுட்டது.
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
பதறிப்போய் அவனைப் பார்த்தேன். கறுப்பன்தான். முகலட்சணம் என்றும் சொல்வதற்கில்லை. ஆனால், அவன் இதயத்தில் நிறைந்த அன்பிருக்கிறது என்று, மனதைப் படிக்க முடிந்த என் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது. கண்ணியத்தையும், அன்பையும், ஒழுக்கத்தையும் எப்படி என்னால் போட்டோவில் காட்டமுடியவில்லையோ அப்படித்தான் அவனும் அன்பையும், பாசத்தையும், கண்ணியத்தையும் தோற்றத்தில் காட்டமுடியாமல் திணறுகிறான் என்று என் கண்கள் சொல்லிற்று!

“உன்ர வீட்டுக்குப் பின் ரோட்டில இருக்கிறன். இராசநாயகின்ர மகன்.” அந்த ஆன்ட்டியை எனக்குத் தெரியும். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் தெரியும். அவனா இவன்?

“உனக்கு நினைவிருக்கா? முதல் முதல் நீலக்கலர்ல சாரி கட்டிக்கொண்டு சைக்கிள் ஓடப்பயந்து இதால உருட்டிக்கொண்டு நடந்து போனியே?” என் விழிகள் வியப்பால் விரிந்தன. உயர்தரம் கடைசிவருட மாணவர்களான எங்களுக்குப் பிரியாவிடை கொடுக்கப்பட்ட அன்று நான் முதன் முதலில் கட்டிய சேலையும் நடந்த நிகழ்வும் அது

“உன்ர சைக்கிள் செயின் ஒருக்கா நடுரோட்டில அறுந்து நீ நிக்கேக்க, உன்ர வீடு தெரியும் கொண்டுவந்து விடுறன் எண்டு சொல்லி ஆட்டோ பிடிச்சு உன்ன அனுப்பினான் நினைவிருக்கா?” ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

ஆமாம்! அன்று இவன் ‘நான் இராசநாயகின்ர மகன்’ என்று சொன்னான் தான். பரீட்சைக்குப் போகிற அவசரத்தில் அவன் முகத்தைக்கூடக் கவனிக்காமல் ஓடிப்போயிருந்தேன்.

ஒரு நன்றி கூடச் சொல்லாமல் உதவி செய்தவனை மறந்தோமே என்கிற குற்றவுணர்வு தாக்கத் தலைகுனிந்தேன்.

“உனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறான்? நன்றி சொல்லேல்ல எண்டெல்லாம் கவலைப்படாத!”

என்னை அவன் வேற்றாளாக நினைக்கவேயில்லை. நெஞ்சைத் தொட்ட வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனேன்.

“நீ வேலைக்குப்போகத் துவங்கிய புதுசுல ஒருத்தன் உனக்குப் பின்னாலேயே வருவான். ஒருநாள் உன்னை மறிச்சுப் பயப்படுத்த அழுதுகொண்டு வீட்டை போனியே.. நினைவிருக்கா? அதுக்குப்பிறகு அவன் வரவே இல்லை. ஏன் எண்டு யோசிச்சியா? அவனை அடிச்சு வெளுத்து பத்துக்கட்ட வச்சது நான்தான்.” உண்மைதான். அந்த வாரம் முழுவதும் வேலைக்கே போகாமல் பயத்தில் வீட்டிலேயே அடைபட்டு இருந்ததும், அடுத்த வாரத்திலிருந்து நடுங்கிக்கொண்டே போய்வந்தபோது அவன் அடிபட்டு வைத்தியசாலையில் கிடக்கிறான் என்று கேள்விப்பட்டதும், ‘நான் கடவுளிடம் வேண்டியது நடந்திருக்கிறது’ என்று சந்தோசப்பட்டதும் நினைவுவந்தது.

“நீ மலேரியா காய்ச்சல் வந்து கிடந்தநேரம், உனக்குச் சுகமாகவேனும் எண்டு இதே கோயில்ல வேண்டுதல் வச்சிட்டு, உன்ர அம்மா எப்ப வெளில போவா எண்டு பாத்திருந்து வந்து படுத்திருந்த உனக்குத் திருநீறு பூசிப்போட்டுப் போனதும் உனக்குத் தெரியாது.” சின்னச் சிரிப்போடு அவன் சொன்னபோது பிரமித்துப்போய்ப் பார்த்திருந்தேன்.

அதற்குக் காரணம் அவன் சொன்னது மட்டுமல்ல அவனது சிரிப்பும்தான்!

அன்று கடைக்குப் போய்விட்டு வந்த அம்மா, “தனியா இருக்கப் பயந்திட்டியா பிள்ளை? திருநீறு பூசி இருக்கிறாய்.” என்று கேட்டதும், “நீங்கதானே பூசிவிட்டீங்க..” என்று நான் சொன்னதும் நினைவில் வந்தது.

ஆனால், இதையெல்லாம் ஏன் செய்தான்? அப்போதும் என் விழிகளில் தொனித்த கேள்வியைப் படித்தான் அவன்.

“எனக்கும் அப்பத் தெரியாது. ஆனா உனக்குப் பின்னாலேயே வருவன். நீ என்ன செய்யிறாய், எங்க போறாய் எண்டெல்லாம் பாப்பன். முதன்முதலா உனக்கு மாப்பிள்ளை பார்க்கீனம் எண்டு அம்மா வந்து சொல்லேக்கதான் நான் உன்ன விரும்புறன் என்றது எனக்கே தெரியவந்தது. அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வர இதே கோயில்ல வந்திருந்துதான் அந்தக் கல்யாணம் உனக்குச் சரிவரக்கூடாது எண்டு வேண்டினான்.” விழிகள் விரிய அவனைப் பார்த்தேன்.

‘சரிவந்துவிட வேண்டும்’ என்று நான் வேண்டிக்கொண்டிருந்த அதே நேரம் சரிவரக்கூடாது என்று அவன் வேண்டியிருக்கிறான்.

“செத்திடலாம் மாதிரி இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.” அவன் சொன்னபோது பதறிப்போய்ப் பார்த்தேன்.

என் பதற்றம் அவன் மனதுக்கு இதமாய் இருந்திருக்கிறது என்பதை என்னை நேசமுடன் தழுவிய அவன் கண்களில் கண்டேன்!

“நீயில்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்யக்கூட முடியேல்ல. எவ்வளவோ அன்பு இருந்தாலும், உன்னட்ட வந்து சொல்லத் தைரியம் இல்ல. உனக்கெல்லாம் என்னைப் பிடிக்குமா?” அவனே பிடிக்காது என்று முடிவு கட்டிக்கொண்டு சொன்னான்.

“இதே நான் கொஞ்சம் நிறமா, வடிவா இருந்திருந்தா வந்து சொல்லி இருப்பன். உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கும். நான்தான் கறுப்பா.. கன்றாவியா.. ப்ச்! நீ நல்லாருக்கோணும். உனக்கு வடிவான நல்ல மாப்பிள்ளை கிடைக்கோணும் எண்டு நினைச்சுக்கொண்டு என்னை நானே தேற்றிக்கொள்வன். அதேநேரம் நீயில்லாம எனக்கு வேற வாழ்க்கை இல்லை எண்டும் முடிவு செய்திட்டன். நீ சந்தோசமா இருக்கிறதைப் பாத்துக்கொண்டு இப்படியே வாழ்ந்துமுடிப்பம் எண்டுதான் முடிவு செய்திருந்தனான்.”

அவனது காதல் கொண்ட நெஞ்சம் என்னைக் கேட்டுக்கொண்டிருக்க, ‘நான் அழகற்றவன்’ என்று முடிவு செய்திருந்த மூளை என்னை விட்டு விலகியிருக்கச் சொல்லியிருக்கிறது. இரண்டு எண்ணங்களுக்குமிடையில் கிடந்து அல்லாடியிருக்கிறான் என்று விளங்கியது எனக்கு.

இப்படி எத்தனையோ. கேட்க கேட்க பிரமித்துப்போனேன். அவன் எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

“நான் டீக்கடைதான் வச்சிருக்கிறன். படிக்கேல்ல. முந்தி கூலிக்குத்தான் நிண்டனான். மாத சம்பளத்தில் ஒரு ரூபாயும் அம்மாக்கு குடுக்காம செலவு செய்திடுவன். பொறுப்பேயில்ல எண்டு அம்மா திட்டுவா. காதில வாங்கினதே இல்ல. எண்டைக்கு உன்ன பாத்தனோ, அண்டுல இருந்து நல்லா வந்திடவேணும் எண்டு ஒரு ரூபாயும் செலவழிக்காம, அம்மா கேட்டாக்கூடக் குடுக்காம, அம்மாக்கு ஒரு சாரி கூட வாங்கிக்குடுக்காம சிறுகச் சிறுக காசு சேத்துக் கடை போட்டிருக்கிறன். நான் இண்டைக்கு என்ர கடைக்கு முதலாளியா இருக்கிறன் எண்டா அதுக்குக் காரணம் நீதான். இப்பக் கஷ்டம்தான். ஆனா, கொஞ்ச நாள்ல நல்லா வந்திடுவன்.” என்று வேகமாய்ச் சொல்லிக்கொண்டு வந்தவன் தயங்கி என் முகம் பார்த்தான்.

பொறுப்பில்லாமல் திரிந்த ஒருவன் என்னால் மனிதனாக உழைப்பாளியாக உயர்ந்திருக்கிறான். இது எதுவும் தெரியாமல், என் வேதனைக்குள் நான் உழன்றிருக்கிறேன். இப்போது என்ன சொல்ல வருகிறான்? என்று கேள்வியாக நான் பார்க்க, மீண்டும் தயங்கிவிட்டு என் முகம் பார்க்காமல் சொன்னான்.

“என்ன நீ கட்டினா உன்ன நல்லா வச்சிருப்பன். நீ எண்டா எனக்கு உயிர். ஏன் எதுக்கு எண்டெல்லாம் கேட்டா என்னட்ட பதில் இல்ல. ஆனா, உன்னப் பாக்கிற நேரமெல்லாம், வாழ்ந்தா உன்னோடதான் வாழவேணும் எண்டு மனம் சொல்லும். ஆனா.. நான் வடிவில்ல.. உனக்குப் பொருத்தமில்லை எண்டு நினச்சா..” தான் அழகனில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை அவனை அலைக்கழிக்கிறது என்று விளங்கிக்கொண்டேன். அதேநேரம் கிடைத்த சந்தர்ப்பத்தை விடவும் மனமில்லாமல் மனதைச் சொல்லியும் விட்டான்.

எத்தனையோபேர் புறத்தோற்றத்தை மட்டுமே வைத்து மதிப்பிட்டு குப்பையாய் ஒதுக்கிய துன்பத்தை அனுபவித்தவள் நான். என்னால் அவன் சொன்னதுபோல அவனது புறத்தோற்றத்தை வைத்து எடைபோட முடியவில்லை. விழியோரம் நீர் சுரக்க அவனையே பார்த்திருந்தேன்.

“தயவுசெய்து அழாத! என்னைவிட நல்லவனா, வடிவான ஒருத்தனைக் கட்டி நீ சந்தோசமா இருக்கோணும் எண்டுதான் என்ர ஆசைய சொல்லாம இவ்வளவு நாளும் பேசாம இருந்தன். இண்டைக்கு நீ அழுறதைப் பாத்திட்டுப் பேசாமப் போக மனசு விடேல்ல. உனக்குப் பிடிக்காட்டி ஒண்டும் வேண்டாம். நீ சந்தோசமா இருக்கோணும். அது மட்டும்தான் எனக்கு முக்கியம்.” என்னவோ நான் அழுவதைக் காணவே சகியாதவன் போன்று வேகவேகமாய்ச் சொன்னவனையே கண்கள் கலங்கப் பார்த்தேன்.

இப்போது ஏனோ என் கண்களுக்குப் பேரழகனாய்த் தெரிந்தான் அவன். அவன் கண்களில் தெரிந்த பாசம், அன்பு, நேசம், பரிதவிப்பு இவையெல்லாம் அவனை இன்னுமின்னும் அழகனாய்க் காட்டியது. அவனை ஏற்றுக்கொள், இந்த அன்பை விட்டுவிடாதே என்று என் உள்மனம் அழுத்திச் சொன்னது. உன்னைத் தட்டிக்கழித்து நல்லதொரு வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் போன்று நீயும் நல்லதொரு வாழ்க்கைத் துணையை இழந்துவிடாதே! கத்திச் சொல்லியது மூளை.

இத்தனை நாட்களாக என்னையே நினைத்துக்கொண்டு என் பின்னாலேயே ஒருவன் சுற்றியிருக்கிறான் என்பதே தெரியாமல், கண்களையும் மனதையும் சலனப்பட்டுவிடாமல் பக்குவமாக மூடி வைத்துக்கொண்டு வாழ்ந்து என்ன கண்டேன்? இரண்டாம் தாரம் மட்டும்தானே?

சட்டென்று எழுந்த நான் அவனோடு போய் நின்றது அம்மாவின் முன்னேதான்.

“எங்களுக்குக் கல்யாணம் செய்து வைங்கம்மா.”

இதுநாள் வரை நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்த நான் இப்படி வந்து நிற்பேன் என்று அம்மா எதிர்பார்க்கவில்லை என்று அதிர்ந்த அவர் முகத்திலேயே தெரிந்தது.

ஆனாலும், “இவர் அவரின்ர குடும்பத்தை நாளைக்குக் கூட்டிக்கொண்டு வருவார் அம்மா. நீங்க பேசி, கல்யாணத்த முடிச்சு வைங்கோ!” என்று தைரியமாகச் சொன்னேன்.

அம்மா ஆயிரம் சொன்னார். அடிக்க வந்தார். எனக்கு ஒண்டும் தெரியாதாம், ஊர் காறித்துப்புமாம், ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு இவ்வளவு தைரியம் ஆகாதாம். பெரியமனுசர் ஒரு முடிவு எடுத்தால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமாம்.

என்னை இரண்டாம் தாரமாகக் கொடுப்பதில் என்னென்ன அர்த்தம் இருக்கிறது என்று சத்தியமாக எனக்கு விளங்கவே இல்லை.

இப்போது அம்மா அவனைக் குறிவைத்தார். அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லையாம். அவனுடைய அம்மா கூடச் சம்மதிக்கமாட்டாராம்.

“அது என் பொறுப்பு!” என்று அவன் சொல்லியும் கேட்கத் தயாராயில்லை. இரண்டாம் தாரத்திலேயே நின்றார்.

கொஞ்சநேரம் அம்மாவின் கண்களையே பார்த்தேன். மாற்றமே இல்லாமல் அவர் சொல்வதுதான் நடக்கவேண்டும் என்கிற முடிவோடு நின்றிருந்தார். இரண்டாம் தாரமாகக் கூடக் கட்டிக்கொடுக்கத் தயாரான அம்மாவுக்கு இளம் வாலிபனாக, முதல் தாரமாக வாழப்போகும், என் மனதுக்குப் பிடித்த நல்லவன் வேண்டாமாம்! ஏன்?

புறத்தோற்றம், ஏழ்மை. என்னை எதைக்கொண்டு மற்றவர்கள் தட்டிக் கழித்தார்களோ அதே காரணங்கள்! நான் முடிவு செய்துவிட்டேன்! என் வாழ்க்கையை நான் வாழப்போகிறேன்! அவனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு திரும்பிப் படலையை நோக்கி நடக்கத் துவங்கினேன். என்னால், அம்மாவின் அதிந்த பார்வை என் முதுகிலேயே நிலைத்துவிட்டதை உணர முடிந்தது.

எனக்குத் தெரியும்! இனி என்னை ஊரே தூற்றும்! என் ஒழுக்கம் கேள்விக்குறியாகும்! அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

ஒரு பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களோடும் அடக்க ஒடுக்கமாய், ஒருவனையும் ஏறெடுத்தும் பாராமல், ஒழுக்கத்தோடு, கண்ணியமான பெண்ணாக, பொறுப்பாக வீட்டில் இருக்கும்வரை கறுப்பி, குண்டு, கட்டை, நீண்ட முடி என்று தட்டிக்கழித்த சமுதாயத்துக்கு இப்போது மட்டும் என்னைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கிறதாம்?

நிமிர்வோடு என் செந்தூரனின் கரம் பற்றி என் சந்தோசமான எதிர்காலம் நோக்கி நடைபோட துவங்கினேன்
 
Last edited by a moderator:
Top Bottom