• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதழ் 3

ரோசி கஜன்

Administrator
Staff member
என் கருவறைக்குள்

1543519388082.png


புரண்டு புரண்டு விளையாடும்

என் குட்டிப் பிரபஞ்சமே!


உன் பிஞ்சுக் கால்கள்

என் வயிற்றில் உதைக்கும் போதெல்லாம்

வயறு மட்டும் அல்ல

என் உயிரும் தான் அதிர்ந்து போகின்றது.


உன் தலையென

நினைத்துக் கொண்டுதான்

அடிக்கடி

தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்

என் வயிற்றை!


உன் பாதங்களில்

மீசை முள் குத்திவிடுமோ

என்றுதான் பயந்து போகின்றேன்

உன் அப்பா

என் வயிற்றில்

முத்தமிடும் போதெல்லாம்!


விழுதுகள் பூமியை

பற்றிக் கொள்வது போல்

உனைப் பற்றிக் கொண்டிருக்கிறது,

என் தொப்புள் கொடி!


விழிகளையும் விரல்களையும்

மூடிக்கொண்டவாறே இருக்கிறாய்!

உன் அம்மாவிற்கு

சுகப்பிரவசமாக வேண்டுமென

நேர்த்திக்கடனா?


என் கருவறைக்குள்

கதிர்வீச்சுகளைப் பாய்ச்ச அனுமதிக்க மாட்டேன்

உள்ளிருக்கும் நீ

ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன?

என் இருளுக்குள் மலர்ந்து கொண்டிருக்கும்

வெளிச்சப் பூ நீ!


நான் பேசும் அதிர்வுகளை வைத்து

அசைவுகளால் பதிலுரைக்கிறாய்

நான் பேசும் போது

என் உதடுகள் அசைவது போல்

நீ பேசும் போது

என் வயிறு அசைகிறது!


என் பனிக்குடத்தில்

ததும்பிக் கொண்டிருக்கும்

உயிர்த் தீர்த்தம் நீ!


என் குரலின்

சப்த அலைவரிசைகள்

உனைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்!

அடம் பிடிக்காமல் உறங்கு!

அம்மாவையும் கொஞ்சம் உறங்க விடு!


நான் முதல் முதலாக கேட்ட

உன் இதயத்துடிப்பு தான்

என் உயிர் தீண்டிய

மெல்லிய இசை!


உன் அசைவுகளுள்

ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதுபோல் தான்

என் வருடல்களுள்

கோடி முத்தங்கள் இருக்கிறது!


உன் முகம் காண

என் விழியும்

உன் குரல் கேட்க

என் செவியும்

உன் வாசம் நுகர

என் நாசியும்

உன்னை முத்தமிட

என் இதழ்களும்

உனக்குப் பாலூட்ட

என் மார்புகளும்

உனை வாரியணைக்க

என் கரங்களும்

ஏங்கிக் கிடக்கிறது

தாய் வரம் தரவிருப்பவனே(ளே)

சீக்கிரம் வா!



-அகத்தியா
 

ரோசி கஜன்

Administrator
Staff member
சீதனவில் ...

1543521631447.png



அழகோவியமாய் அவளைப் படைத்த பிரம்மன்
அவளுக்கானவனை மட்டும்
செதுக்கிட மறந்துவிட்டான் போலும்

சீதை இவளும்
சீதன வில்லுடைத்து
அழைத்துச் சென்றிட
ராமன் வருவான்
எனும் நம்பிக்கையில்
காத்திருக்கிறாள் இன்றுவரை.

தனுமாதம் கடந்தால்
இவளுக்கோ வயது நாற்பது
முதுமையின் தொடக்கத்தில்
அடியெடுத்து வைத்துவிட்டாள்
ஆனால் அம்மி மிதிக்கும் நேரம் தான்
குறிக்கவில்லை இன்னும்.

வெள்ளை முடி ஐந்தாறு எட்டிப்பார்க்க
வெண்ணிலா இவளும்
தேய்கிறாள் தினந்தோறும்
கண்ணீர் மட்டுமே
நிரந்தர முகவரியாய்
ஒட்டிக் கொள்கிறது இவளோடு

சொர்க்கத்தின் பத்திரிகை
அச்சடிக்கவில்லை போல்
இவள் பெயரினை
திருமணச்சந்தையிலோ
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் போதும்
மணமகளாய் இவள் பெயருமாகும்
திருமணப் பத்திரிகையில்

ஏழையின் வீட்டில் பிறந்ததால்
கிட்டவில்லை ஆயிரம் காலத்துப் பந்தம்
கன்னி கழியாமல் இருக்கிறாள்
கருவினைச் சுமக்கும் வயதில்

முதிர்கன்னிப் பட்டத்தைச் சுமந்து கொண்டு


-உதயசகி



 

ரோசி கஜன்

Administrator
Staff member
வாழ்க்கையை வென்றிட …!




1543521990116.png



நம்பிக்கை உள்ளவரை மண்டியிட நினையாதே!

கைரேகையும் ஜோதிடமும் எதிர்காலம் இல்லை!

கை இல்லாதவனும் வாழ்கிறான், கையுள்ளவனும் பிச்சையெடுக்கிறான்.



மரணத்தின் தருணம் தவிர எதுவும் மாறலாம்.

ஜனனத்தின் போதே நிச்சயிக்கப்படும் மரணத்தின் முடிவும்!

இதைப் புரிந்து கொள் தோழா!



அதிகாரமோகமும் ஆடம்பர எண்ணமும்,

சதிகார சமுதாயத்தின் வழிகோல்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பார்!

வழிகாட்டும் உனக்கு!

வந்த பாதையை நினைவில் கொள்!

மோகத்தை விடுத்து பாசத்தைக் காட்டு!

முடியாது என்ற எண்ணத்திற்கு முடிவு கொடு!



நம்பிக்கையையும் நாணயத்தையும் துடுப்புகளாக்கு!

வாழ்க்கைப்படகு வழி தவறாது.

அனைத்தையும் நேசி! அனைவரையும் மதி!

சிந்தனையையும் செயற்பாட்டையும் துல்லியமாக்கு!

நல்லவற்றை சிந்தி! சிந்தனையை வள! எண்ணத்தை செயலாக்கு!

உள்ளத்தின் பூரிப்பு உன்னுள்ளே உணர்வாய்.



எழுந்து வா தோழா! எதிர்காலம் காத்திருக்கு.

புறப்படு தோழா! இலக்கினை நோக்கி.

தடைகள் வென்று நாளை சரித்திரம் படைப்போம்.



-யாழ் சத்யா
 
Top Bottom